கைகேயி பண்டைய வரங்களைத் தர வேண்டுதல்  

1502.ஆன்றவன் அவ் உரை கூற, ஐயம் இல்லாள்,
‘தோன்றிய பேர் அவலம் துடைத்தல் உண்டேல்,
சான்று இமையோர்குலம் ஆக, மன்ன! நீ அன்று
ஏன்ற வரங்கள் இரண்டும் ஈதி’ என்றாள்.

     ஆன்றவன்- குணங்களால் நிறைந்த தயரதன்; அவ் உரைகூற -
அந்த உறுதிமொழியைச்சொல்ல; ஐயம் இல்லாள்- தன் கருத்து
நிறைவேறும் என்பதில் ஐயம் நீங்கியவளான கைகேயி;‘மன்ன- அரசனே;
தோன்றிய பேர் அவலம்  துடைத்தல் உண்டேல் -எனக்கு
உண்டாகிய பெரியதுன்பத்தைக் களைவது உளதானால்; இமையோர் குலம்
சான்று ஆக -
தேவர்கூட்டம் சாட்சியாக;  நீஅன்று ஏன்ற வரங்கள்
இரண்டும் ஈதி-
நீ சம்பராசுரப்போர்நிகழ்ந்த அந்நாளில் எனக்களிப்பதாக
மனம் இசைந்த இரு வரங்களையும்  இப்பொழுதுகொடுப்பாய்;’ என்றாள்-.

     தயரதன் விருப்பத்திற்கு மாறான வரங்களைத் தான் கேட்கப்போவதால்
அவன் வாக்குத் தவறினாலும் தவறலாம் என்பதால் அவனைக் கட்டுப்படுத்த
எண்ணித் தேவர் கூட்டம்சான்றாக முன்பு தந்த வரங்களைத் தருமாறு
அவனிடம் வேண்டுகிறாள்.

     சான்று - சாட்சி. ஆக - வினையெச்சம். ஈதி - ஏவல் வினைமுற்று. 12