தயரதன் உற்ற துயரம் 1505. | நாகம் எனும் கொடியாள், தன் நாவின் ஈந்த சோக விடம் தொடர, துணுக்கம் எய்தா, ஆகம் அடங்கலும் வெந்து அழிந்து, அராவின் வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான். |
நாகம் எனும் கொடியாள் - பாம்பு என்று சொல்லத்தக்க கொடியவளாகிய கைகேயி; தன் நாவின் ஈந்த - தனது நாக்கினின்றும் வெளியிட்ட; சோக விடம் தொடர -துன்பத்தைத் தரும் சொல்லாகிய நஞ்சு தன்னைப் பற்றிக்கொள்ள; துணுக்கம் எய்தா -நடுக்கம் அடைந்து; ஆகம் அடங்கலும் வெந்து அழிந்து - தன் உடல் முழுவதும் வெதும்பிச் சோர்ந்து; அராவின் வேகம் அடங்கிய - நச்சுப் பாம்பினால் தன் ஊக்கம் தணியப்பெற்ற; வேழம் என்ன - யானை போல; வீழ்ந்தான் - (தயரதன் கீழே) விழுந்தான். இதனால் கைகேயியின் சொற்களில் இருந்த கொடுமை கூறப்பட்டது. சோக விடம் - உருவகம்.துயர்க் காரணம் சொற்களாதலால் ‘நாவின் வந்த விடம்’ என்று வேற்றுமையணியாகக் கூறினார்.ஆகம் வெந்து வீழ்ந்தான்’ - சினை வினை முதலோடு முடிந்தது. அராவின் - இன் ஏதுப் பொருளில் வந்தது. 15 |