1507.உலர்ந்தது நா; உயிர் ஓடலுற்றது; உள்ளம்
புலர்ந்தது; கண்கள் பொடித்த, பொங்கு சோரி;
சலம் தலைமிக்கது; ‘தக்கது என்கொல்?’ என்று என்று
அலந்து அலையுற்ற, அரும் புலன்கள் ஐந்தும்.

     நா உலர்ந்தது - (தயரதனுக்கு) நாக்கு வறண்டது;  உயிர் ஓடல்
உற்றது -
உயிர்போகத் தொடங்கியது;  உள்ளம் புலர்ந்தது - மனம்
வாடியது; கண்கள் பொங்குசோரிபொடித்த - கண்கள் மிகுதியாகக் குருதி
சிந்தின;  சலம் தலைமிக்கது - கவலை மிகுந்தது; அரும் புலன்கள்
ஐந்தும் -
அரிய ஐந்து பொறிகளும்; தக்கது என்கொல் என்று என்று -
செய்யத்தக்கது என்ன என்று எண்ணி  எண்ணி;  அலந்து அலையுற்ற -
கலங்கித் தவித்தன.

     இதில் தயரதன் அடைந்த அவல மெய்ப்பாடுகள் கட்டப்படுகின்றன.
கோபத்தால் கண்கள் இரத்தம்சிந்தின. புலன் - ஈண்டுப் பொறிகளைக்
குறித்தது; ஆகுபெயர். ‘அலந்து அலையுற்ற’ என்பதனை ‘அலந்தலைஉற்ற’
என்று கொள்வாரும் உண்டு. அலந்தலை - ஒருசொல்; கலக்கம் என்பது
பொருள்.  சலம் - கோபமும்ஆம்.                               17