1511.அஞ்சலள், ஐயனது அல்லல் கண்டும்; உள்ளம்
நஞ்சிலள்; ‘நாண் இலள்’ என்ன, நாணம் ஆமால்;
‘வஞ்சனை பண்டு மடந்தை வேடம்’ என்றே
தஞ்சு என மாதரை உள்ளலார்கள், தக்கோர்.

     ஐயனது அல்லல் கண்டும் அஞ்சலள் - (தன்) கணவனது
துன்பத்தைக் கண்டும் அவள் அச்சம்கொள்ளவில்லை; உள்ளம் நஞ்சிலள்-
மனம் இரங்கவில்லை; ‘நாண் இலள்’ என்ன -‘வெட்கப்படவும் இல்லை’
என்று அவள் நிலையைக் கூற;  நாணம் ஆம் - (சொல்லும்) நமக்கே
வெட்கம் உண்டாகும்; தக்கோர் - சால்புடைய பெரியோர்; ‘பண்டு -
தொன்றுதொட்டே;வஞ்சனை - வஞ்சனை என்பது;  மடந்தை வேடம் -
பெண்ணுருவம்;’ என்றே -என்று எண்ணியே;  மாதரை - பெண்களை;
தஞ்சு என - பற்றுக்கோடு என்று;  உள்ளலார்கள்- நினையார்கள்.

     பெண்மைக் குணங்கள் யாதுமின்றி இருந்த கைகேயி நிலைபற்றிக்
கூறுவது நாணம் தருகிறது என்கிறார்கம்பர்.  ஐயன் - கணவன், தலைவன்,
நஞ்சிலள் - நைந்திலள் என்பதன்போலி. தஞ்சு - தஞ்சம்என்பதன் விகாரம்.
‘ஆல்’ அசை.                                                 21