1515. | ‘ஆ கொடியாய்! எனும்; ஆவி காலும்; ‘அந்தோ! ஓ கொடிதே அறம்!’ என்னும்; ‘உண்மை ஒன்றும் சாக!’ எனா எழும்; மெய் தளாடி வீழும் - மாகமும் நாகமும் மண்ணும் வென்ற வாளான். |
மாகமும் நாகமும் மண்ணும் - மேலுலகத்தையும் கீழுலகத்தையும் நிலவுலகத்தையும்; வென்ற வாளான்-வெற்றி கொண்ட வாட்படையையுடைய தயரதன்; ஆ கொடியாய் எனும் - (கைகேயியிபைப் பார்த்து) ஐயோ, கொடியவளே என்பான்; ஆவி காலும் - பெருமூச்சுவிடுவான்; அந்தோ ஓ கொடிதே அறம் என்னும் - ஐயோ! தருமம் மிகவும் கொடியதே என்பான்; உண்மை ஒன்றும் சாக எனா - சத்தியம் என்பதொன்று சாகட்டும் என்று சொல்லிக்கொண்டு;எழும் - எழுந்திருப்பான்; மெய் தளாடி வீழும் - உடம்பு நிற்க முடியாமல் தள்ளாடிவிழுவான். இப்பாட்டு ஒரு சோக சித்திரம்; மன்னவன் துயரத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது. ஆகொடியாய் - ஆ - இரக்கக் குறிப்பு. தயரதன் அறமும் உண்மையும் நன்மைக்குத் துணை புரியாமல் இராமன்காடு புகுதலாகிய தீமைக்கு வழி வகுத்தலின் அவற்றை இகழ்கிறான். மாகம் - துறக்கம். நாகம்- பாதாளம். 25 |