1517. | கையொடு கையைப் புடைக்கும்; வாய் கடிக்கும்; ‘மெய்யுரை குற்றம்’ எனப் புழுங்கி விம்மும்; நெய் எரி உற்றென நெஞ்சு அழிந்து சோரும் - வையகம் முற்றும் நடந்த வாய்மை மன்னன். |
வையகம் முற்றும் நடந்த - உலகம் முழுவதும் பெருவழக்காய் அறியப் பெற்ற; வாய்மை மன்னன் - சத்தியம் தவறாத தயரதன்; கையொடு கையைப் புடைக்கும் - கையுடன்மற்றொரு கையை ஓங்கி அடிப்பான்; வாய் துடிக்கும் - உதட்டைக் கடிப்பான்; மெய்உரை குற்றம் என - உண்மை சொல்லுதல் தீங்கைத் தருவது என்று சொல்லி; புழுங்கிவிம்மும்- மனம் வெந்து பொருமுவான்; நெய் எரி உற்று என - நெய்யில் நெருப்புப் பட்டாற்போல; நெஞ்சு அழிந்து - மனம் உடைந்து; சோரும் - வருந்துவான். வாய்மை மன்னனாகிய தயரதனை மெய்யுரை குற்றம் என எண்ணச் செய்தது அவனுக்கு இராமபிரான்பால்உள்ள பேரன்பு. கைபுடைத்தல் வாய்கடித்தல் ஆகியவை சினத்தால் நிகழும் மெய்ப்பாடுகள். 27 |