1517.கையொடு கையைப் புடைக்கும்; வாய் கடிக்கும்;
‘மெய்யுரை குற்றம்’ எனப் புழுங்கி விம்மும்;
நெய் எரி உற்றென நெஞ்சு அழிந்து சோரும் -
வையகம் முற்றும் நடந்த வாய்மை மன்னன்.

     வையகம் முற்றும் நடந்த - உலகம் முழுவதும் பெருவழக்காய்
அறியப் பெற்ற; வாய்மை மன்னன் - சத்தியம் தவறாத தயரதன்; கையொடு
கையைப் புடைக்கும் -
கையுடன்மற்றொரு கையை ஓங்கி அடிப்பான்;
வாய் துடிக்கும் - உதட்டைக் கடிப்பான்;  மெய்உரை குற்றம் என -
உண்மை சொல்லுதல் தீங்கைத் தருவது என்று சொல்லி; புழுங்கிவிம்மும்-
மனம் வெந்து பொருமுவான்; நெய் எரி உற்று என - நெய்யில் நெருப்புப்
பட்டாற்போல;  நெஞ்சு அழிந்து - மனம் உடைந்து; சோரும் -
வருந்துவான்.

     வாய்மை மன்னனாகிய தயரதனை மெய்யுரை குற்றம் என எண்ணச்
செய்தது அவனுக்கு இராமபிரான்பால்உள்ள பேரன்பு. கைபுடைத்தல்
வாய்கடித்தல் ஆகியவை சினத்தால் நிகழும் மெய்ப்பாடுகள்.           27