1518.‘ஒறுப்பினும் அந்தரம், உண்மை ஒன்றும் ஓவா
மறுப்பினும் அந்தரம்’ என்று, வாய்மை மன்னன்,
‘பொறுப்பினும் இந் நிலை போகிலாளை வாளால்
இறுப்பினும் ஆவது இரப்பது’ என்று எழுந்தான்.

     வாய்மை மன்னன் - சத்தியத்தைப் பேணிக் காக்கும் தயரதன்;
‘ஒறுப்பினும்அந்தரம் - இவளைத் தண்டித்தாலும் தீமை; உண்மை
ஒன்றும் ஓவா -
மெய்யைச்சிறிதும் காவாமல்; மறுப்பினும் அந்தரம் -
கொடுத்த வரங்களைத் தர மறுத்தாலும்தீமை;’  என்று - என்று கருதி; ‘இந்
நிலை போகிலாளை -
இந்நிலையினின்றும்மாறாதவளை; பொறுப்பினும் -
பொறுத்து அடங்குவதைக் காட்டிலும்; வாளால் இறுப்பினும்- வாளால்
கொல்வதைக் காட்டிலும்; இரப்பது ஆவது - இவளை வேண்டி யாசிப்பதே
பொருத்தம்;’ என்று எழுந்தான் - என்று கருதி, அது செய்யப்
புறப்பட்டான்.

     பலவாறாகத் துன்பப்பட்ட தயரதன் இறுதியில் இரந்து வேண்டுதல்
ஒருவேளை பயன் தரலாம் என்றுகருதி அவ்வாறு செய்யத் துணிந்தான்.
பொறுப்பு, இறுப்பு - தொழிற்பெயர்கள்; இன் - உறழ்ச்சிப்பொருளில்
வந்தது.                                                      28