1535. | என்று, என்று, உன்னும்; பன்னி இரக்கும்; இடர் தோயும்; ஒன்று ஒன்று ஒவ்வா இன்னல் உழக்கும்; ‘உயிர் உண்டோ? இன்று! இன்று! ’ என்னும் வண்ணம் மயங்கும்; இடையும் - பொன் - குன்று ஒன்று ஒன்றோடு ஒன்றியது என்னக் குவி தோளான். |
பொன்குன்று ஒன்று - பொன்மலை ஒன்று; ஒன்றோடு ஒன்றியது என்ன - மற்றொருபொன்மலையோடு கூடியது என்னுமாறு; குவி தோளான் - திரண்ட தோள்களையுடைய தயரதன்; என்று என்று உன்னும் - முற்கூறியவாறு பலபடியாக நினைப்பான்; பன்னி இரங்கும் - வாயினால் பல சொல்லி வருந்துவான்; இடர் தோயும்- துன்ப வெள்ளத்தில் அழுந்துவான்; ஒன்று ஒன்று ஒவ்வா - ஒன்றோடு ஒன்று பொருந்தாத; இன்னல் உழக்கும் - பலவகைத்துன்பங்களால் வருந்துவான்; உயிர் உண்டோ - மூச்சு இருக்கிறதோ; இன்று இன்று என்னும்வண்ணம் - இல்லை இல்லை என்று கூறும்படி; மயங்கும் - மூர்ச்சையுறுவான்; இடையும்- (நெஞ்சம்) உடைவான். தோய்தல் என்னும் வினைக்கு ஏற்றவாறு இடர் வெள்ளமாக உரைக்கப் பட்டது. ‘பொன் குன்றுஒன்று ஒன்றோடு ஒன்றியது என்ன’ - இல்பொருள் உவமை. 45 |