1542. | தோய் கயத்தும், மரத்தும், மென் சிறை துள்ளி, மீது எழு புள் எலாம் தேய்கை ஒத்த மருங்குல் மாதல் சிலம்பின் நின்று சிலம்புவ - கேகயத்து அரசன் பயந்த விடத்தை, இன்னது ஓர் கேடு சூழ் மா கயத்தியை, உள் கொதித்து, மனத்து வைவன போன்றவே. |
தோய் கயத்தும் - நீராடும் குளங்களிலிருந்தும்; மரத்தும் - மரங்களிலிருந்தும்; மென் சிறை துள்ளி - மெல்லிய சிறகுகளால் குதித்துக்கொண்டு; மீது எழு புள் எலாம் -வானத்தில் பறக்கின்ற பறவைகள் எல்லாம்; தேய்கை ஒத்த மருங்குல் - தேய்வு பொருந்திய சிற்றிடையையுடைய; மாதல் சிலம்பின் நின்று - பெண்களின் பாதச் சிலம்புகள்போலிருந்து; சிலம்புவ - ஒவிப்பவை; கேகயத்து அரசன் பயந்த விடத்தை -கேகேய மன்னன் பெற்றெடுத்த விடம்போன்றவளை; இன்னது ஓர்கேடு சூழ் - இத்தகைய கெடுதியைச்சூழ்ந்து செய்த; மா கயத்தியை - மிக்க கீழ்மையுடையவளை; உட்கொதித்து - உள்ளம் புழுங்கி; மனத்து வைவன போன்ற - மனத்திற்குள் ஏசுவனவற்றை ஒத்திருந்தன; ஏ -அசை. பறவைகள் விடியற்காலத்தில் ஒலிப்பதைக் கைகேயி செயல்கண்டு அவளைத் தம்மனத்தினுள் வைவது போலும் என்றார். இது தற்குறிப்பற்ற அணி, கணவன் உயிரை வாங்கக் காரணமாதலின்‘விடத்தை’ என்றார். கயத்தி - கயவன் என்பதன் பெண்பால்; கீழ்மையுடையவள். அவள் செயலின் கொடுமை நோக்கி ‘மா கயத்தி’ என்றார். ஏ - அசை 52 |