1546.இன மலர்க் குலம்வாய் விரித்து,
     இள வாச மாருதம் வீச, முன்
புனை துகிற்கலை சோர, நெஞ்சு
     புழுங்கினார் சில பூவைமார்;
மனம் அனுக்கம் விட, தனித்தனி, வள்ளலைப்
     புணர் கள்ள வன்
கனவினுக்கு இடையூறு அடுக்க, மயங்கினார்
     சில கன்னிமார்.

     சில பூவைமார் - பெண்கள் சிலர்;  இன மலர் குலம் வாய்
விரித்து-
பல்வகையானபூக்களின் கூட்டங்கள் வாய்விட்டு மலர; வாச இள
மாருதம் வீச -
நறுமணம் கலந்த இளங்காற்றுவீசுதலினால்; முன் புனை-
முன்னே தாம் அரையில் உடுத்தியிருந்த; துகில் கலைசோர - அடையும்
மேகலையும் குலைய;  நெஞ்சு புழுங்கினார் - மனம் வருந்தினார்கள்; சில
கன்னிமார் -
மணமாகா மகளிர் சிலர்; மனம் அணுக்கம் விட - நெஞ்சில்
உள்ள வருத்தம்  தீர;  தனித்தனி - தனித்தனியே (ஒவ்வொருவரும்);
வள்ளலைப்புணர்- இராமபிரானைச் சேர்வதாகக் கண்ட; கள்ளம் வன்
கனவுக்கு -
மிக்க வஞ்சனையையுடையகனாவிற்கு;  இடையூறு அடுக்க -
காற்றினால் தடை பொருந்துதலினால்;  மயங்கினார் -திகைத்தனர்.

     தென்றல் வீசுவதனால் காம விருப்பம் மிகக் கணவனைப் பிரிந்த
மாதர்கள் புழுங்கினர். திருமணமாகாதபெண் காற்றினால் தூக்கம் கலைந்து
கனவு நீங்க,  உண்மையறிந்து  மயங்கினர். விரித்து -விரிய;  செய்தென்
எச்சம் செயவென் எச்சமாயிற்று; எச்சத்திரிபு.                       56