1548. மொய் அராகம் நிரம்ப, ஆசை முருங்கு
     தீயின் முழங்க, மேல்
வை அராவிய மாரன் வாளியும், வான்
     நிலா நெடு வாடையும்,
மெய் அராவிட, ஆவி சோர வெதும்பு
     மாதர்தம் மென் செவி,
பை அரா நுழைகின்ற போன்றன -
     பண் கனிந்து எழு பாடலே.

     மொய் அராகம் நிரம்ப - அடர்ந்த காம வேட்கை மனத்தில்
நிறையும்படியும்;  ஆசை முருங்கு தீயின் முழங்க - ஆசை கிளர்ந்த
எரியும் நெருப்பைப் போல மிகுந்திடுமாறும்; மேல் - வெளியே;  வை
அராவிய மாரன் வாளியும்-
கூர்மை செய்யப்பட்ட மன்மதன்அம்புகளும்;
வான் நிலா நெடு வாடையும்- விண்ணில் நிலவும் நீண்ட வாடைக்காற்றும்;
மெய் அராவிட -  உடலை அறுத்தலால்;  ஆவி சோர - உயிர் தளர;
வெதும்பும்மாதர்தம் மென்செவி - வாடுகின்ற மகளிருடைய மெல்லிய
காதுகளில்;  பண் கனிந்து  எழுபாடல் - இசை முதிர்ந்து  எழுகின்ற
பாடல்கள்; பை அரா நுழைகின்ற போன்றன - படத்தையுடைய பாம்புகள்
நுழைவனவற்றை ஒத்தன;

     கணவனைப் பிரிந்த மாதரை மாரன் அம்புகளும், வாடைக் காற்றும்
இரவில் வருத்த. காலையில்எழுந்த பாடல்கள் அவ் வருத்தத்தை
மிகுவித்துத் துன்புறுத்தின. அராகம் - காதல்; பொருளிடத்துத் தோன்றும்
பற்றுள்ளம். ஆசை - உள்ளம்விரும்பியதைப் பெறவேண்டும் என்று மேலும்
மேலும் நிகழ்வது.  நிலா நெடுவாடை - நிலாவும் நெடியவாடைக் காற்றும்.
பாடல் - பள்ளியெழுச்சிப் பாடல்.  ஏ - ஈற்றசை.                   58