விளக்குகள் ஒளி மழுங்குதல் 1553. | வையம் ஏழும் ஓர் ஏழும் ஆர் உயிரோடு கூட வழங்கும் அம் மெய்யன், வீரருள்வீரன், மா மகன்மேல் விளைந்தது ஒர்காதலால் நைய நைய, நல் ஐம்புலன்கள் அவிந்து அடங்கி நடுங்குவான் தெய்வ மேனி படைத்த சேயொளி போல் மழுங்கின - தீபமே. |
வையம் ஏழும் ஓர் ஏழும் - பதினான்கு உலகங்களையும்; ஆர் உயிரோடு கூட வழங்கும்அம் மெய்யன் - தன் அரிய உயிருடனே சேர்த்துக் கொடுக்கின்ற அந்த மெய்ம்மையாளனும்; வீரருள் வீரன் - வீரர்களுக்குள் வீரனாய் இருப்பவனுமாகிய தயரதன்; மா மகன்மேல் விளைந்தது ஓர் காதலாதல்- தன் மூத்த பிள்ளையிடத்து எழுந்த ஒப்பற்ற பாசத்தால்; நையநைய - மிகவும் வருந்த; நல் ஐம்புலன்கள் அவிந்து அடங்கி - சிறந்த ஐந்து புலன்களும்கெட்டு அடங்கிப்போக; நடுங்குவான் தெய்வமேனி படைத்த - நடுங்குகி்ன்றவனாகிய தயரதனதுதெய்வத்தன்மை பொருந்திய உடலில் இருந்த; சேய் ஒளிபோல் - செவ்விய ஒளி மெல்ல மெல்லமழுங்குவது போல; தீபம் மழுங்கின - விளக்குகள் (பொழுது விடிவதால்) ஒளி குறைந்தன. தயரதன் மேனி ஒளியிழந்தது போலத் தீபங்களும் ஒளியிழந்தன. மா மகன் - மூத்த மகன்,ஈண்டுப் பிறப்பானும் சிறப்பானும் முதல்வனாகிய இராமனைக் குறித்தது. திருவுடை மன்னன் திருமாலாகக்கொள்ளப்படுதலின், அவன் மேனி ‘தெய்வமேனி’ எனச் சிறப்பிக்கப்பட்டது. உயிர்ப்பிரியும் காலம் அடுத்தபோது, புலன்கள் கலங்கி ஒடுங்குதலும், உடம்பின் ஒளி குன்றுதலும் நிகழ்வனவாகும். 63 |