மகளிர் கூட்டத்தின் வருகை 1564. | குவளையின் எழிலும், வேலின் கொடுமையும், குழைத்துக் கூட்டி, திவளும் அஞ்சனம் என்று ஏய்ந்த நஞ்சினைத் தெரியத் தீட்டி, தவள ஒண் மதியுள் வைத்த தன்மை சால் தடங் கண் நல்லார், துவளும் நுண் இடையார், ஆடும் தோகை அம் குழாத்தின் தொக்கார். |
குவளையின் எழிலும் - கருங்குவளை மலரின் அழகையும்; வேலின் கொடுமையும் - வேற்படையின் கொலைத் தன்மையையும்; குழைத்துக் கூட்டி - ஒன்றாய்க் கலந்து சேர்த்து; திவளும் அஞ்சனம் என்று ஏய்ந்த- விளங்குகின்ற மை என்று பெயர்பொருந்திய; நஞ்சினைத் தெரியத் தீட்டி - விடத்தை விளங்கப் பூசி ; தவளஒன்மதியுள் வைத்த தன்மை சால் - வெள்ளிய ஒளிமிக்க சந்திரனிடத்தில் வைத்தாற்போன்றதன்மை அமைந்த; தடங் கண் நல்லார் - பெரிய கண்களையுடைய அழகியவரும்; துவளும் நுண் இடையார்-துவளுகின்ற மெல்லிய இடையினையுடையவரும் ஆகிய மகளிர்; ஆடும் தோகைஅம் குழாத்தின் - நடனமாடும் ஆழகிய மயிற்கூட்டம் போல; தொக்கார் - வந்துகூடினர். குவளையின் அழகையும் வேலின் கொடுமையையும் சேர்த்து, மையாகிய நஞ்சினைப்பூசி, மதியுள்வைத்தன போலும் கண்கள் என்பது இல்பொருள் உவமை. ‘அஞ்சனம் என்று ஏய்ந்த நஞ்சு’ என்பது உருவகம். தோகை - ஆகுபெயர். 74 |