வசிட்ட முனிவன் செயல்  

1571.கங்கையே முதல ஆய கன்னி
     ஈறு ஆன தீர்த்த
மங்கலப் புனலும், நாலு வாரியின்
     நீரும் பூரித்து.
அங்கியின் வினையிற்கு ஏற்ற
     யாவையும் அமைத்து, வீரச்
சிங்க ஆசனமும் வைத்து,
     செய்வன விறவும் செய்தான்.

     கங்கை முதல் ஆய - கங்கையாறு முதலாக;  கன்னி  ஈறு ஆன -
குமரியாறு ஈறாகஉள்ள; தீர்த்த மங்கலப் புனலும் - புன்ணிய
தீர்த்தங்களின் மங்களகரமான நீரையும்; நாலு வாரியின் நீரும் - நான்கு
கடல்களில் நீரையும்;  பூரித்து - குடங்களில்நிறைத்துவைத்து; அங்கியின்
வினையிற்கு
- அக்கினியில் செய்யவேண்டும் ஓமம் முதலியசடங்குகளுக்கு;
ஏற்ற யாவையும் அமைத்து - பொருந்திய எல்லா வற்றையும்தக்கவாறு
செய்து;  வீரச் சிங்க ஆதனமும் வைத்து - வீர சிம்மாசனத்தையும் உரிய
இடத்தில் அமைத்து; செய்வன பிறவும் செய்தான் - மேலும் செய்ய
வேண்டுவனவற்றையும்செய்தான்.

     வசிட்ட முனிவன் ஒமத்திற்கும் நீராட்டத்திற்குத் வேண்டுவன எல்லா
வற்றையும்அமைத்துவைத்தான்.  அங்கியின் வினை - ஓமம்;  அதற்குரியன
அட்சதை, தருப்பை, சமித்து,நெய், அகப்பை முதலியன. ‘பிறவும்’ என்பது
ஓமத்திற்குரிய புரோகிதர் முதலாயினோரைவரித்தல்,  அங்குரார்ப்பணம்.
சுமங்கலி அமைத்தல், யானை, குதிரை,  அத்திமரத்தால்  செய்தபீடம்
முதலிய வற்றைக் குறித்தது.                                      81