சுமந்திரன் இராமனை அழைத்துவரச் செல்லுதல் 1574. | ‘என்றனள்’ என்னக் கேட்டான்; எழுந்த பேர் உவகை பொங்கப் பொன் திணி மாட வீதி பொருக்கென நீங்கி, புக்கான்; தன் திரு உள்ளத்துள்ளே தன்னையே நினையும் மற்று அக் குன்று இவர் தோளினானைத் தொழுது, வாய் புதைத்து, கூறும்; |
‘என்றனள்’ - ‘பிள்ளையைக் கொணர்க’ என்று கைகேயி சொன்னாள்; என்னகேட்டான் - என்று கூறக் கேட்டான் சுமந்திரன்; எழுந்த பேர் உவகை பொங்க - உண்டாகிய மிக்க மகிழ்ச்சி மேலும் மேலும் பெருக; பொன் திணி மாட வீதி -பொன்மயமான மாடங்களையுடைய தெருக்களை; பொருக்கென நீங்கி - விரைவாகக் கடந்து; புக்கான் - (இராமனது மாளிகையினுள்) புகுந்தான்; தன் திரு உள்ளத்துள்ளே -(அங்குத்) தனது மனத்திற்குள்ளே; தன்னையே நினையும் அக்குன்று இவர் தோளினாளை- தன்னையே நினைத்துக்கொண்டிருக்கின்ற அந்தக் குன்று போன்ற புயங்களையுடைய இராமபிரானை; தொழுது வாய் புதைத்து - (கண்டு) வணங்கி வாயை மூடிக்கொண்டு; கூறும் - (பின்வருமாறு) சொல்லலானான். இராமபிரான் தான் கொண்ட மானிட வேடத்திற்கு ஏற்றவாறு, உண்ணாமல் நோன்புமேற்கொண்டு நாராயணனைத் தியானித்து நிற்றலின் ‘தன்னையே நினையும்’ என்றார். இராமனைவாழ்த்தித் தயரதனுடன் சேர்த்து அனுப்பக் கருதியே கைகேயி இராமனை அங்கேஅழைத்திருப்பதாகச் சுமந்திரன் எண்ணியதால் எழுந்த பேருவகைபொங்குவதாயிற்று. 84 |