1578.துண்ணெனும் சொல்லாள் சொல்ல,
     சுடர் முடி துறந்து, தூய
மண் எனும் திருவை நீங்கி
     வழிக்கொளா முன்னம், வள்ளல்
பண் எனும் சொல்லினார்தம்
     தோள் எனும் பணைத்த வேயும்,
கண் எனும் கால வேலும்,
     மிடை நெடுங் கானம் புக்கான்.

     துண்ணெனும்சொல்லாள் சொல்ல - நடுங்கத்தக்க
சொல்லினையுடைய கைகேயி சொல்லுதலால்;  வள்ளல் -
இராமபிரான்;
சுடர் முடி துறந்து -
ஒளிபொருந்திய முடிசூடுதலைத் தவிர்ந்து; தூய மண்
எனும் திருவை நீங்கி -
தூய்மையுடையநிலமகள் என்னும் செல்வியையும்
பிரிந்து; வழிக் கொளா முன்னம் - (காடு)செல்லுவதற்கு முன்னரே; பண்
எனும் சொல்லினார்தம் -
இசைப்பாட்டு என்று சொல்லத்தக்க
சொற்களையுடைய பெண்களில்;  தோள் எனும் பணைத்த வேயும்-
தோள்களாகிய பருத்தமூங்கில்களும்; கண் எனும் கால வேலும் -கண்கள்
என்னும் யமனைப் போன்ற வேல்களும்; மிடை நெடுங்கானம்புக்கான் - 
செறிந்த பெருங்காட்டில் புகுந்தான்.

     பெண்கள் கூட்டம் மொய்த்து நோக்க, இராமபிரான் தேரில் சென்றான்
என்பதாம்.பின்வரும்  நிகழ்ச்சியை முன்னே பொருந்திக் கூறியுள்ள நயம்
கருதத்தக்கது.  இவ்வாறு கம்பர்பாடுதலை 20,2828, 3151, 4759 முதலிய
பாடல்களாலும் உணரலாம்.                                      88