1580.‘ “அங்கணண் அவனி காத்தற்கு ஆம்
     இவன்” என்னல் ஆமோ?
நம் கண் அன்பு இலன்’ என்று, உள்ளம்
     தள்ளுற நடுங்கி நைவார்.
‘செங் கணும், கரிய கோல
     மேனியும், தேரும், ஆகி,
எங்கனும் தோன்றுகின்றான்;
     எனைவரோ இராமன்?’ என்பார்.

     ‘அங்கணன்இவன் - அழகிய கண்களையுடைய இந்த இராமன்;
அவனி காத்தற்கு ஆம்- இவ்வுலகைக் காப்பாற்றுவதற்குத்தக்கவன்
ஆவான்; என்னல் ஆமோ- என்று கூறுதல்பொருந்துமோ?(பொருந்தாது);
நம் கண் அன்பு இலன் -  நம்மீது அன்பு இல்லாதவனாக.
இருக்கின்றானே;’ என்று - என்று எண்ணி;  உள்ளம் தள்ளுற நடுங்கி
நைவார் -
மனம் தடுமாறுவதால்  உடல்  நடுங்கித் துன்புறுவாராகி;
‘செங்கணும் - சிவந்தகண்களும்;  கரியகோல மேனியும் - கருநிறம்
வாய்ந்த அழகிய திருமேனியும்;  தேரும்ஆகி -தேருமாகப் பொருந்தி;
எங்கணும் தோன்றுகின்றான் - (இராமன்)எங்குப்பார்த்தாலும்  காட்சி
தருகின்றான்;  இராமன் எனைவரோ - இராமன்வடிவுடையோர் எத்தனை
பேரோ;’  என்பார் - என்று வியப்புடன்கூறுவார்.

     நமக்கு அருள் புரியாதவன் எப்படி உலகத்திற்கு அருள்புரிந்து
காப்பாற்றப் போகிறான் என்றுமனம் தடுமாறினார்கள் அவன்மீது காதல்
கொண்ட பெண்கள்.  காம மிகுதியால் பார்க்குமிடம்எங்கும் இராமனைக்
கண்டனர்.   இஃது  உருவெளித்தோற்றம்.                         90