1583.‘உயர் அருள் ஒண் கண் ஒக்கும்
     தாமரை, நிறத்தை ஒக்கும்
புயல் பொழி மேகம், என்ன
     புண்ணியம் செய்த’ என்பார்;
‘செயல் அருந் தவங்கள் செய்து, இச்
     செம்மலைத் தந்த செல்வத்
தயரதற்கு என்ன கைம்மாறு
     உடையம் யாம் தக்கது?’ என்பார்.

     ‘உயர்அருள் ஒண்கண் ஒக்கும்  தாமரை -  மிகுந்த கருணை
நிறைந்த ஒளிபடைத்தஇவன் கண்களைப் போன்ற தாமரை மலரும்;
நிறத்தை ஒக்கும் புயல்பொழி மேகம் -திருமேனியின்நிறத்தைப்
போன்ற நீரைப் பொழியும் கார் மேகமும்;  என்ன புண்ணியம்செய்த
என்பார் -
  என்ன நல்வினை புரிந்தன’  என்று  கூறுவார் சிலர்;  செயல்
அருந்  தவங்கள் செய்து -
பிறரால் செய்வதற்கு முடியாத தவங்களைச்
செய்து;  இச் செம்மலைத்தந்த - இந்த நம்பியைப்பெற்று (நமக்குக்)
கொடுத்த;  செல்வத் தயரதற்கு -பேற்றினையுடையசக்கரவர்திக்கு;
தக்கது - அவர் செய்த நன்றிக்குத் தக்கதான; என்ன கைம்மாறு யாம்
உடையம்- எந்த மறு உதவி உடையராய் இருக்கின்றோம்?;  என்பார்-
என்று கூறுவர் சிலர்.

     இராமன் கண்ணழகிலும் மேனியழகிலும் ஈடுபட்டு அவற்றிற்கு
உவமையாகும் தகுதிபெற்ற தாமரையையும்,  மேகத்தையும்  புகழ்ந்தனர்
சிலர், இராமனைப் பெற்றுத் தந்த தயரதன் தந்தகொடைக்கு ஈடாக எந்தக்
கைம்மாறும்  நம்மால் செய்ய இயலாது  நன்றியால் நிறைந்தனர் சிலர்.
புயல் - நீருக்கு இலக்கணை.                                     93