1588.மின் பொருவு தேரின்மிசை
     வீரன் வரு போழ்தில்,
தன் பொருவு இல் கன்று தனி
     தாவி வரல் கண்டாங்கு
அன்பு உருகு சிந்தையொடும்
     ஆ உருகுமாபோல்,
என்பு உருகி, நெஞ்சு உருகி,
     யார் உருககில்லார்?

     வீரன் - வீரனாகிய இராமன்;  மின் பொருவு தேரின்மிசை -
மின்னலையொத்த தேரின்மீது ஏறிவரும்போது;  ஆ - பகவானது;  தன்
பொருவு இல் கன்று -
தனது ஒப்பற்ற கன்று;  தனி தாவி வரல்
கண்டாங்கு -
தனியே துள்ளிக் குதித்து வருதலைப்பார்த்தபோது; அன்பு
உருகு சிந்தையொடும் -
அன்பினால் கரைகின்ற மனத்தோடு;  உருகுமா
போல் -
உருகும் வகைபோல; என்பு உருகி - உடம்பு நெகிழ்ந்து; நெஞ்சு
உருகி -
மனம் உருகி (நிற்பதன்றி); உருககில்லார்யார் - உருகாமல்
வன்மையோடுநின்றவர் யார்? (எவரும் இலர்).

     இராமனைக் கண்ட எல்லாரும் தம்மையறியாமலே அவன்மீது அன்பு
தோன்றி  உள்ளமும் உடலும்உருகி நிற்பர் என்றவாறு.  கண்டாங்கு -
தொகுத்தல் விகாரம், அகரம் தொக்கது. உருகுமா போல்- உருகுமாறுபோர்ல;
ஆ - ஆறு என்பதன் விகாரம். பின்னிரண்டு அடிகளில் உருகுதல் என்ற
சொல் பலமுறை  ஒரே பொருளில் வந்தது  சொற்பொருட் பின்வருநிலை
அணி.                                                       98