1612.“ஈண்டு உரைத்த பணி என்னை” என்றவட்கு.
‘ “ஆண்டு ஓர் ஏழினொடு ஏழ், அகன் கானிடை,
மாண்ட மா தவத்தோருடன் வைகி, பின்,
மீண்டு நீ வரல் வேண்டும்” என்றான்’ என்றான்.

     ‘ஈண்டு - இவ்விடத்தில்;  உரைத்த - (சக்கரவர்த்தி உனக்குச்)
சொல்லிய;  பணி என்னை’ - கட்டளை யாது;  என்றவட்கு - என்று
கேட்டகோசலைக்கு;  ஓர் ஏழினோடு ஏழ் ஆண்டு - ஒரு பதினான்கு
ஆண்டுக் காலம்;  அகன்கானிடை - அகன்ற காட்டிடத்தில்;  மாண்ட -
மாட்சிமை பொருந்திய;  மாதவத்தோருடன் - முனிவர்களுடன்;  வைகி -
தங்கி;  பின் - பிறகு;  நீ மீண்டு வரல் வேண்டும் - நீ திரும்பி வருதல் 
வேண்டும்;  என்றாள்’ - என்று கூறினான்;  என்றான் -.

     கோசலை வருந்தாதிருக்கக் ‘காட்டிற்கு அனுப்பி விட்டான்’என்று
கூறாமல், முனிவர்களுடன் தங்கித் திரும்பிவருதல் வேண்டும் என்று நாயகன்
பணித்தான்என்ற இராமன் சொல்திறம் போற்றுதற்குரியது. ஈண்டு -
முன்னிலையிடத்தின் கண் வந்தது.                                 7