1616. | ‘நன்று மன்னன் கருணை’ எனா நகும்; நின்ற மைந்தனை நோக்கி, ‘நெடுஞ் சுரத்து என்று போவது? எனா எழும்; இன் உயிர் பொன்றும் போது உற்றது உற்றனள் போலுமே. |
‘மன்னன் கருணை நன்று’ எனா நகும் - ‘சக்கரவர்த்தி உன்பால் காட்டிய இரக்கம்மிக நன்றாய் இருந்தது’ என்று சிரிப்பாள்; நின்ற மைந்தனை நோக்கி - தன் எதிரேநின்ற இராமனைப் பார்த்து; ‘நெடுஞ் சுரத்துப் போவது என்று’ எனா எழும் - நீண்டகாட்டு வழியில் போவது எப்போது என்று சொல்லி எழுந்திருப்பாள்; இன் உயிர் பொன்றும்போது உற்றது - இனிய உயிர் போகும்போது அடைகின்ற மரண வேதனையை; உற்றனள் போலும் - தற்போது அடைந்தாள் போல ஆனாள். தானும் உடன் செல்வாள்போல எழுவாளாயினள் என்க. சாவுத்துயர் அடைந்தாள் என்பதாம். ‘ஏ’ஈற்றசை. 11 |