1621. | ‘சிறந்த தம்பி திரு உற, எந்தையை மறுந்தும் பொய் இலன் ஆக்கி, வனத்திடை உறைந்து தீரும் உறுதி பெற்றேன்; இதின், பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ? |
‘சிறந்ததம்பி திரு உற - (என்னிலும்) சிறந்த தம்பியாகிய பரதன் அரசச்செல்வம் பெற; எந்தையை - என் தந்தையாகியதயரதனை; மறந்தும் பொய் இலன்ஆக்கி - மறப்பினாலும்பொய் சொல்லாத சத்திய வாக்கினனாகச் செய்து; வனத்திடை -காட்டில்; உறைந்து தீரும் உறுதி பெற்றேன் - வசித்துத் திரும்பி வருகின்ற நன்மையைஅடைந்தேன்; இதின் - இதைக்காட்டிலும்; யான்பிறந்து பெறும்பேறு என்பது யாவதோ?’ - யான் பிறவி எடுத்துப் பெறுகின்ற பாக்கியம் என்பது வேறு என்ன இருக்கிறது; (இல்லை). ‘பங்கம் இல் குணத்து எம்பி’ என்றது (1608.) போல இங்கும் ‘சிறந்த தம்பி’ என்றதுகாண்க. ‘யாவதோ’ ஓகாரம் வினாப் பொருளில் வந்தது. இனி, யாவது என்பதே வினாவாதலின்,‘ஓ’ காரம் எதிர்மறை குறித்தது எனினும் ஆம். 16 |