கோசலை  வேண்டுகோளை இராமன் மறுத்துரைத்தல்  

1624.‘என்னை நீங்கி இடர்க் கடல் வைகுறும்
மன்னர் மன்னனை வற்புறுத்தாது, உடன்
துன்னு கானம் தொடரத் துணிவதோ?
அன்னையே! அறம் பார்க்கிலை ஆம்’ என்றான்.

     ‘அன்னையே! - தாயே;  என்னை நீங்கி - என்னைப் பிரிந்து;
இடர்க்கடல்  வைகுறும் - துன்பக்கடலில் தங்கியுள்ள;  மன்னர்
மன்னனை
-சக்கரவர்த்தியை; வற்புறுத்தாது - மன உறுதி செய்து
தைரியப்படுத்தாமல்;  உடன் -என்னோடு;  துன்னு கானம் - நெருங்கிய
காட்டிற்கு; தொடர - பின்பற்றிவர;  துணிவதோ? - மனத்தில் நிச்சயிப்பது
தகுமோ;  அறம் பார்க்கிலை ஆம்! - மனைவிக்குள்ள தருமத்தை
ஆராய்ந்து  கருதவில்லை போலும்;’  என்றான் -.

     மனைவியின் தர்மம் கணவனைக் காத்தல். ‘தற்காத்துத் தற்கொண்டான்
பேணித் தகைசான்ற,சொற்காத்துச் சோர்விலாள் பெண்’ என்றார்
வள்ளுவரும். (குறள். 56) இந்தப் பத்தினிதர்மத்தை இராமன் தன் தாய்க்கு
நினைவு படுத்தினான்.                                           19