1625. | ‘வரி வில் எம்பி இம் மண் அரசு ஆய், அவற்கு உரிமை மா நிலம் உற்றபின், கொற்றவன் திருவின் நீங்கித் தவம் செயும் நாள், உடன், அருமை நோன்புகள் ஆற்றுதி ஆம் அன்றே! |
‘வரிவில் எம்பி - கட்டமைந்த வில்லினை உடைய என்தம்பி பரதன்; இம் மண்அரசு ஆய் - இந்தக் கோசல நாட்டுக்கு அரசன் ஆகி; அவற்கு - அந்தப் பரதனுக்கு; மாநிலம் உரிமை உற்றபின் - பெரிய இராச்சியத்தின் உரிமை நிலைப்பட்ட பிறகு; கொற்றவன் - தயரதன்; திருவின் நீங்கி - அரச போக வாழ்க்கையிலிருந்துவிலகி; தவம் செய்யும் நாள் - தவம் செய்கின்ற காலத்தே; உடன் - அவனோடு சேர்ந்து; அருமை நோன்புகள் - செயற்கரிய விரதங்களை; ஆற்றுதி ஆம் -செய்வாயாக.’ வரத்தால் அரசன் ஆயினும், மக்கள் அவன் வழிப்படவும் அவன் ஆட்சி உறுதி பெறவும்சிலகாலம் செல்லுமாகலின், ‘மாநிலம் உரிமை உற்றபின்’ என்றான் இராமன். வானப்பிரந்தநிலையில் மனைவியை உடன்கொண்டு தவம் செய்தல் உண்டாதலின் உடன்சென்று அரிய விரதங்களைச்செய்க என்றானாம். ‘அன்று’ , ‘ஏ’ அசைகள். 20 |