பரதன் ‘தந்தை எங்குளார்’ என்று கேட்டல்  

2144.‘மூண்டு எழு காதலால், முளரித் தாள் தொழ
வேண்டினென், எய்தினென், உள்ளம் விம்முமால்’
ஆண் தகை நெடு முடி அரசர் கோமகன்
யாண்டையான்? பணித்திர்’ என்று, இரு கை கூப்பினான்.

     (பரதன் கைகேயியைப் பார்த்து) ‘மூண்டு எழு காதலால் - என்
உள்ளத்திலிருந்து மேல் எழும்புகின்ற பெரு விருப்பத்தால்;  முளரித் தாள்
தொழ
- (தயரத மன்னனது)தாமரையாகிய திருவடிகளை வழிபட;
வேண்டினென்- விரும்பி; எய்தினென்-வந்துள்ளேன்; உள்ளம் விம்மும்-
(தந்தையைக் காண) மனம் துடிக்கிறது; ஆண்தகை நெடுமுடிஅரசர்
கோமகன்
- ஆடவர் திலகமாய அருங்குணம்  உடைய நீண்ட மகுடம்
அணிந்த மன்னர்மன்னனாகிய தயரதன்; யாண்டையான்? -
எவ்விடத்தான்?; பணித்திர்’ -சொல்லுங்கள்;’ என்று -; இரு கை
கூப்பினான்
- இரண்டு கைகளையும் குவித்துத் தாயைவணங்கினான்.

     பணித்திர் - உயர்வொருமை. அறுபதினாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக
அரசு வீற்றிருந்தவன்ஆதலின் ‘நெடுமுடி’ என்றார்.  தயரதனைத் தேடிக்
கண்டிலன்;  நகருட் புகுந்தவுடன் ‘அருப்பம்’அன்று  இது’ என்று  ஐயம்
உற்றனன்.  ஆதலான்.  தந்தையைக் காண மூண்டு எழு காதல் அவன்பால்
உண்டாகியது;  உள்ளம் விம்மியது என அறிக. ‘ஆல்’ அசை நிலை.    43