தயரதன் வசிட்டனிடம் வேண்டுதல் 1645. | என்ற அம் முனிவன் தன்னை, ‘நினையா வினையேன், இனி, யான் பொன்றும் அளவில் அவனைப் புனை மா மகுடம் புனைவித்து, ஒன்றும் வனம் என்று உன்னா வண்ணம் செய்து, என்உரையும், குன்றும் பழி பூணாமல், காவாய்; கோவே!’ என்றான். |
என்ற அம்முனிவன் தன்னை - என்று ஆறுதல் கூறிய அவ்வசிட்ட முனிவனை நோக்கி(தயரதன்); ‘கோவே! - ஆசார்யத் தலைவனே!; நினையா வினையேன் யான் இனிப்பொன்றும் அளவில் - நினைக்க இயலாத கொடிய வினையுடைய யாம் மேல் இறந்துபடுவதற்குமுன்னால்; அவனைப் புனைமா மகுடம் புனைவித்து - அந்த இராமனை அணிதற்குரிய முடியைச் சூடும்படி செய்து; ஒன்றும் வனம் என்று - காட்டுக்குப் போவோம் என்று; (அவன் தன்மனத்தில்) உன்னா வண்ணம் செய்து - நினையாதபடி செய்து; என் உரையும் - என் வாக்கும்; குன்றும் பழி பூணாமல் - இழிவாகிய பழி மேற் கொள்ளாதபடி; காவாய் -காப்பாற்றுவாயாக! என்றான் - கைகேயியால் இம்மாற்றம் நிகழ வேண்டும் என்பதை ‘என் உரையும் குன்றும் பழி பூணாமல்காவாய்’ என்ற தயரதன் வேண்டுகோளால் அறியலாம். தன் சத்தியத்தில் சிறிதும் தவறாததயரதன் பெருங் குணநலமும் இங்கே வெளிப்படுகிறது. 40 |