கோசலையின் பெருந்துயர் 1658. | ‘போவாது ஒழியான்' என்றாள், புதல்வன் தன்னை; கணவன் சாவாது ஒழியான் என்று என்று, உள்ளம் தள்ளுற்று அயர்வாள்; ‘காவாய்' என்னாள் மகனை; கணவன் புகழுக்கு அழிவாள்; ஆ! ஆ! உயர் கோசலை ஆம் அன்னம் என் உற்றனளே! |
புதல்வன்தன்னை- மகனாகிய இராமனை; ‘போவாது ஒழியான்' என்றாள் - வனம் போகாமல் இருக்கமாட்டான் என்று சொன்னாள்; கணவன் ‘சாவாது ஒழியான்' என்று என்று-(அப்படி இராமன் காடு செல்லின்) கணவனாய தயரதன் சாகாமல் இருக்க மாட்டான் என்று கருதி; உள்ளம் தள்ளுற்று அயர்வாள் - மனம் தடுமாறிச் சோர்வாள்; ‘மகனைக் காவாய்' என்னாள் - வனம் போகாமல்இருந்து தந்தையின் உயிரைக் காப்பாற்றுவாய் என்று மகனைப் பார்த்துச் சொல்லமாட்டாள்; கணவன்புகழுக்கு அழிவாள் - தயரதனது புகழுக்குக்கேடு வருமோ என்று மனம் வருந்துவாள்; ஆ! ஆ!- ; உயர்கோசலை ஆம் அன்னம் - உயர்ந்த கோசலையாகிய அன்னம் போல்வாள்; என் உற்றனள் - என்ன துன்பப்பட்டாள். மகனைத் தடுத்தால் கணவன் புகழுக்கு அழிவு, மகனைத் தடுக்காது விட்டால் கணவன் உயிர்க்குஅழிவு. இரண்டில் எதனையும் செய்ய இயலாது உள்ளம் தடுமாறினாள். ஆ! ஆ! இரக்கக் குறிப்பு.அந்தோ, ஐயகோ என்னும் பொருளது. 53 |