கோசலையின் பெருந்துயர்  

1658.‘போவாது ஒழியான்' என்றாள்,
     புதல்வன் தன்னை; கணவன்
சாவாது ஒழியான் என்று என்று,
     உள்ளம் தள்ளுற்று அயர்வாள்;
‘காவாய்' என்னாள் மகனை;
     கணவன் புகழுக்கு அழிவாள்;
ஆ! ஆ! உயர் கோசலை ஆம்
     அன்னம் என் உற்றனளே!

     புதல்வன்தன்னை- மகனாகிய இராமனை;  ‘போவாது  ஒழியான்'
என்றாள் -
வனம் போகாமல் இருக்கமாட்டான் என்று சொன்னாள்;
கணவன் ‘சாவாது  ஒழியான்' என்று என்று-(அப்படி இராமன் காடு
செல்லின்) கணவனாய  தயரதன் சாகாமல் இருக்க மாட்டான் என்று கருதி;
உள்ளம்  தள்ளுற்று அயர்வாள் - மனம் தடு
மாறிச் சோர்வாள்;
‘மகனைக் காவாய்'  என்னாள் - வனம் போகாமல்இருந்து தந்தையின்
உயிரைக் காப்பாற்றுவாய் என்று மகனைப் பார்த்துச் சொல்லமாட்டாள்;
கணவன்புகழுக்கு அழிவாள் - தயரதனது புகழுக்குக்கேடு வருமோ 
என்று மனம் வருந்துவாள்; ஆ! ஆ!- ;  உயர்கோசலை ஆம்
அன்னம் -
உயர்ந்த கோசலையாகிய அன்னம்  போல்வாள்; என்
உற்றனள் - 
என்ன துன்பப்பட்டாள்.

     மகனைத் தடுத்தால் கணவன் புகழுக்கு அழிவு,  மகனைத் தடுக்காது
விட்டால் கணவன் உயிர்க்குஅழிவு.  இரண்டில்  எதனையும்  செய்ய
இயலாது  உள்ளம்  தடுமாறினாள். ஆ! ஆ!  இரக்கக் குறிப்பு.அந்தோ, 
ஐயகோ  என்னும்  பொருளது.                                  53