1666. | ‘அள்ளற் பள்ளப் புனல் சூழ் அகல் மா நிலமும், அரசும், கொள்ளக் குறையா நிதியின் குவையும், முதலா எவையும், கள்ளக் கைகேசிக்கே உதவி, புகழ் கைக்கொண்ட வள்ளல்தனம் என் உயிரை மாய்க்கும்! மாய்க்கும்! என்றான். |
அள்ளல் பள்ளப் புனல் சூழ் அகல் மா நிலமும் அரசும் - குழைந்த சேறுடைய பள்ளங்கள் நிறைந்த நீரால் சூழப்பெற்ற அகன்ற கோசல நாடும் ஆட்சியும்; கொள்ளக் குறையாநிதியின் குவையும் - கொடுக்கக் குறைவுபடாத செல்வக் குவியலும்; முதலா எவையும்-மற்றுள்ள எல்லாவற்றையும்; கள்ளக் கைகேசிக்கே உதவி - வஞ்சகமுள்ள கைகேசிக்குக்கொடுத்து; புகழ் கைக்கொண்ட- புகழைப் பெற்றுக்கொண்ட; வள்ளல்தனம் -உன்னுடைய உதாரகுணம்; என் உயிரை மாய்க்கும் மாய்க்கும்' - என் உயிரைப் போக்கடிக்கவல்லதாய் நின்றது; என்றான்-. இராமனது வண்மைக் குணம் வெளிப்பட்டு, அது மேலும் தயரதன் மனத்தைப் பலம் இழக்கச்செய்கிறபடி. ‘மாய்க்கும், மாய்க்கும்' புலம்பல் அடுக்கு. ‘ஏ' காரம் தேற்றம். 61 |