1669. | ‘மெய் ஆர் தவமே செய்து, உன் மிடல் மார்பு அரிதின் பெற்ற செய்யாள் என்னும் பொன்னும், நிலமாது என்னும் திருவும், உய்யார்! உய்யார்! கெடுவேன்; உன்னைப் பிரியின், வினையேன், ஐயா! கைகேசியை நேராகேனோ நான்? என்றான். |
ஐயா! - ஐயனே; மெய் ஆர் தவமே செய்து- உண்மை பொருந்திய தவத்தைச்செய்து; உன் மிடல் மார்பு அரிதின் பெற்ற - உன்னுடைய வலிய மார்பைக் கிடைத்தற்கருமையாகப் பெற்ற; செய்யாள் என்னும் பொன்னும்- திருமகள் என்னும் பெண்ணும்; நிலமாது என்னும் திருவும்- நிலமகள் என்னும் செல்வியும்; உய்யார் உய்யார் - நீவனம் செல்லப் பிழைக்கமாட்டார்; கெடுவேன் - பாவியாகியவனும்; வினையேன் நான் - தீவினை உடையவனுமாகிய நான்; உன்னைப் பிரியின் - உன்னைப் பிரிந்து (உயிர்வாழ்ந்தால்); கைகேசியை நேராகேனோ' - கைகேயிக்கு ஒப்பாகிவிட மாட்டேனா;' என்றான்- உன்னைப் பிரிந்து உயிர்தரித்தால் கைகேயிக்கும் எனக்கும் என்ன வேறுபாடு? நானும் அவள்போல வன்கண்மை உடையவனாய்விடுவேன் அல்லவா - என்றான். 64 |