தயரதன் கோசலைபால் ‘இராமன் வருவானா’ எனக் கேட்டு வருந்தல் 1675. | என்று என்று, அரசன் மெய்யும், இரு தாள் இணையும், முகனும், தன்தன் செய்ய கையால் தைவந்திடு கோசலையை, ஒன்றும் தெரியா மம்மர் உள்ளத்து அரசன், மெள்ள, ‘வன் திண் சிலை நம் குரிசில் வருமே? வருமே?’ என்றான். |
என்று என்று - என இவ்வாறு கூறி; அரசன் மெய்யும் - அரசனது உடம்பையும்; இருதாள் இணையும் முகனும் தன்தன் செய்ய கையால் தைவந்திடு கோசலையை -இரண்டு அடிகளையும் முகத்தையும் தன்னுடைய சிவந்த கைகளால் தடவிக் கொடுக்கின்ற கோசலையைப்பார்த்து; ஒன்றும் தெரியா மம்மர் உள்ளத்து அரசன் - ஒரு செய்தியும் அறியாது மயங்கிய மனம் உடைய தசரதன்; மெள்ள - மெதுவாக; ‘வன் திண் சிலை நம் குரிசில்வருமே? வருமே? - வலிய கட்டமைந்த வில்லை உடைய நம்முடைய இராமன் வருவானா, வருவானா;’ என்றான்-. தன்தன் எதுகை நோக்கிய அடுக்கு. ‘வருமே வருமே’ அடுக்கு. 70 |