1684.‘மைந்தன் வரவே நோக்கும்,
     வள மாதவன் பால், மகனோடு
அம் தண் புனல் கொண்டு அணுக,
     “ஐயா, இதுபோது அளவாய்
வந்து இங்கு அணுகாய்; என்னோ
     வந்தது? என்றே, நொந்தேம்;
சந்தம் கமழும் தோளாய்,
     தழுவிக் கொள வா" எனவே.

     ‘மைந்தன் வரவே நோக்கும் - மகனது வருகையையே எதிர்
பார்த்துக்கொண்டிருக்கின்ற; வள மாதவன்பால் - மிக்க தவத்தை உடைய
முனிவனிடம்; மகனோடு - (இறந்த) மகனோடு; அம் தண்புனல் கொண்டு
அணுக -
அழகிய குளிர்ந்த நீரை எடுத்துக் கொண்டு  நெருங்கிச் செல்ல;
‘ஐயா! - மகனே;  இது போது அளவாய் -இவ்வளவு நேரமாய; வந்து
இங்கு அணுகாய் -
இங்கு வந்து சேராமையால்;  என்னோ வந்தது? -
உனக்கு என்ன நேர்ந்ததோ;  என்றே - என்று நினைத்து;  நொந்தேம்-
வருந்தினோம்;  சந்தம்  கமழும் தோளாய்! - சந்தனம்  மணக்கின்ற
தோளைஉடைய மகனே;  தழுவிக் கொள வா’ - நாங்கள் தழுவிக்
கொள்ளும்படி (அருகில்) வா; என - என்று சொல்லி.

     தசரதன் இறந்த மகன் உடலை  எடுத்துக்கொண்டு தண்ணீருடன் கண்
இழந்த முனி தம்பதிகளைஅணுக, அவர்கள் தம் மகன் வந்ததாகவே
கருதினர்  என்பது  இதனால் விளங்கும்.  ‘ஏ’ ஈற்றசை.              79