இராமன் காடு செல்வது கேட்ட மக்கள் துயர்நிலை 1697. | வார் ஆர் முலையாரும், மற்று உள்ள மாந்தர்களும், ஆராத காதல் அரசர்களும், அந்தணரும், பேராத வாய்மைப் பெரியோன் உரை செவியில் சாராத முன்னம், தயரதனைப்போல் வீழ்ந்தார். |
பேராதவாய்மைப் பெரியோன் உரை - பிறழ்ந்து போகாத உண்மைக்கு உறைவிடமானவசிட்ட முனிவனது வார்த்தை; செவியில் சாராத முன்னம் -(தங்கள்) காதுகளில் சேர்வதற்கு முன்னமே; ஆராத காதல் அரசர்களும்- (இராமனதுமுடிசூட்டு விழாவில்) அடங்காத அன்பை உடைய அரசர்களும்; அந்தணரும் - வேதியரும்; மற்று உள்ள மாந்தர்களும் - வேறு உள்ள மனிதர்களும்; வார்ஆர் முலையாரும் - கச்சணிந்த தனத்தையுடைய மகளிரும்; தயரதனைப் போல்வீழ்ந்தார்- மற்றுள்ள மாந்தர்கள் - அமைச்சர், சேனைத் தலைவர், தூதுவர் முதலியவர். பெண்டிர்துன்பம் பெரிதாய்த் தோன்றுமாதலின் செய்யுளில் முதற்கண் உரைக்கப்பட்டது. தயரதன்தன்மகன் காரணமாகத் துன்பத்தில் ஆழ்ந்தது போலவே அத்தகைய அன்புடையவர்கள் இவர்களும்ஆதலின் ‘தயரதனைப் போல் ’ துன்புற்றார் என்றார். அதனையே ‘ஆராத காதல்’ எனவும் கூறினார். 92 |