1701. கிள்ளையொடு பூவை
     அழுத; கிளர் மாடத்து -
உள் உறையும் பூசை
     அழுத; உரு அறியாப்
பிள்ளை அழுத;
     பெரியோரை என் சொல்ல? -
‘வள்ளல் வனம் புகுவான் ’
     என்று, உரைத்த மாற்றத்தால்.

     வள்ளல் - இராமன்;  ‘வனம் புகுவான் - காடு செல்வான்;’  என்று
உரைத்த மாற்றத்தால்
- என்று சொல்லிய சொல்லால்;  கிள்ளையொடு
பூவை அழுத
-கிளியும்,  நாகணவாய்ப் பறவையும் அழுதன;  கிளர்
மாடத்து  உள் உறையும் பூசை அழுத
-விளங்குகின்ற  மாளிகையின்
உள்ளே வசிக்கின்ற வீட்டுப் பூனைகள் அழுதன;  உரு அறியாப்பிள்ளை
அழுத
- வடிவத்தைப் பார்த்து அறிய மாட்டாத சிறு குழந்தைகள் அழுதன;
பெரியோரை என் சொல்ல? - பெரியோர்கள் அழுதமைமையப் பற்றி
என்னவென்று சொல்வது?

     அஃறிணைப் பொருள்களும்  இராமன் பிரிவால் துயர் உறுவனவாகச்
சொல்கிறார். ‘ உரு அறியாப் பிள்ளை’ கருவில் இருக்கும்  வடிவு காணாத
குழந்தைகளும் அழுதன என்று துக்கத்தின் உச்சநிலையைக் காட்டிப்
பொருள் உரைப்பினும் அமையும்.  இவையே இவ்வாறாயினமையின்
பெரியோர்கள்அழுதமைபற்றிச் சொல்ல வேண்டுவதில்லை.            96