1704.ஞானீயும் உய்கலான்
     என்னாதே, நாயகனைக்
‘கான் ஈயும் ’ என்று உரைத்த
     கைகேசியும், கொடிய
கூனீயும் அல்லால்,
     கொடியார் பிறர் உளரோ? -
மேனீயும் இன்றி,
     வெறு நீரே ஆயினார்.

     ‘ஞானீயும்உய்கலான்’என்னாதே - உலகில் பிறந்தார்க்குப் பிரிவும்
சிறப்பும் இயல்பானவை என்பதைத் தெளிய உணர்ந்த ஞானியும்கூட இராமன்
பிரிவால் பிழைக்க மாட்டான் என்று கருதாமல்;  நாயகனைக்‘கான் ஈயும்’
என்று உரைத்த கைகேசியும்
- தன் கணவனைப் பார்த்து  (இராமனுக்குக்)
காட்டைக் கொடும்  என்று  சொல்லிய கைகேயியும்; கொடியகூனீயும்
அல்லால்
- அவளுக்குத் துர்ப்போதனை செய்த கூனியும் தவிர;  பிறர்
கொடியார் உளரோ?
- வேறு யாரேனும் மிகக் கொடியவர்கள்
இருக்கின்றார்களோ  (மற்றவர்கள் அனைவரும்);  மேனீயும் இன்றி -
உடம்பும்  இல்லாமல்;  வெறுநீரே ஆயினார் - வெறுமைத் தன்மை
அடைந்தவர் ஆயினர்.

     ‘கான் ஈயும்’ என்பதற்கு ஏற்ப,  ஞானி,  கூனி,  மேனி என்ற
இகரங்கள் நீண்டன எதுகை நயம் பற்றி. ‘ஞானியே உய்கலான்’ என்றால்
மற்றவர் நிலை சொல்லவேண்டுவதில்லை என்றபடி.