இலக்குவன் சினம் கலித்துறை 1716. | கேட்டான் இளையோன்; ‘கிளர் ஞாலம் வரத்தினாலே மீட்டாள்; அளித்தாள் வனம் தம்முனை, வெம்மை முற்றி;- தீட்டாத வேல் கண் சிறு தாய்’ என, யாவராலும் மூட்டாத காலக் கடைத் தீ என மூண்டு எழுந்தான். |
இளையோன் - இளைய பெருமாளாகிய இலக்குமணன்; ‘தீட்டாத வேல் கண்சிறு தாய் - (இயல்பில் கூர்மை உடைய) தீட்டப் படாத வேல் போன்ற கண்ணை உடையசிற்றன்னையாகிய கைகேயி; வெம்மை முற்றி - கொடுமை மிகுந்து; கிளர் ஞாலம் -விளங்குகின்ற பூமியை; வரத்தினாலே மீட்டாள் - அரசனிடம் பெற்ற வரத்தால்(தன்மகன் பரதன் பக்கமாக) திருப்பிக்கொண்டாள்; தம்முனை - தன் அண்ணனாகியஇராமனுக்கு; வனம் அளித்தாள்.’ காட்டைக் கொடுத்தாள்; என - என்று;கேட்டான் - கேள்விப்பட்டு; யாவராலும் மூட்டாத - ஒருவராலும் உண்டாக்கப்படாத (இயற்கைச் சீற்றம் ஆகிய); காலக் கடைத்தீ என - ஊழி இறுதியில் உண்டாகும் பெருநெருப்பு என்று சொல்லும்படி; மூண்டு எழுந்தான் - சீற்றம் மிகுந்து எழுந்தான். மீட்டல்- இராமனிடம் சென்ற அரசாட்சியைப் பரதனுக்குத் திருப்பியது. ‘தம்முனை -உருபுமயக்கம் - நான்காவதன்கண் இரண்டாவது வந்தது. ‘தமன்முனுக்கு’ என வரும். 111 |