2489. | ‘வாய்மை என்னும் ஈது அன்றி, வையகம், “தூய்மை” என்றும் ஒன்று உண்மை சொல்லுமோ? தீமைதான், அதின் தீர்தல் அன்றியே, ஆய் மெய்யாக; வேறு அறையல் ஆவதே? |
‘வையகம் - உலகம்; வாய்மை என்னும் ஈது அன்றி - சத்தியம் என்கிற இதுவொன்றில்லாமல்; “தூய்மை என்றும் ஒன்று உண்மை சொல்லுமோ? - “தூய்மை என்கின்றஒன்று தனியே இருப்பதாகச் சொல்லுமா?; தீமைதான்- தீய குணம் என்பது; அதின்தீர்தல் அன்றியே- அந்தச் சத்தியத்தை விட்டு நீங்குதல்தானே அல்லாமல்; ஆய் - ஆராய்கின்ற; மெய ஆக - உண்மையாக; வேறு அறையல் ஆவதே - சத்தியமன்றிவேறு ஒன்றைச் சொல்ல இயலுமா ? (இயலாது என்றபடி.) ‘வாய்மையே தூய்மையாம்; வாய்மைதவிரத் தூய்மை தனிவேறில்லை; தீமை என்பது வாய்மையின் தவறுவதே அன்றி வேறன்று; சத்தியத்துக்கு இணையாக, மாற்றாக வேறொன்றைச் சொல்ல இயலாது. ஆகவே, தந்தையார் உரையை, சத்தியத்தைக் காப்பதுதான் என்க தூய்மையாகும். வேறு இல்லை’ என்றான் இராமன். ‘புறத்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையாற் காணப்படும்’ (குறள்.298) என்பது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. 115 |