1720. | அடியில் சுடர் பொன் கழல் ஆர்கலி நாண ஆர்ப்ப பிடியில் தடவும் சிலை நாண் பெரும் பூசல் ஓசை, இடியின் தொடர, கடல் ஏழும் மடுத்து, இஞ் ஞால முடிவில் குமுறும் மழை மும்மையின்மேல் முழங்க, |
அடியில்சுடர் பொன் கழல் ஆர்கலி நாண ஆர்ப்ப - பாதங்களில் ஓளிவீசும்பொன்னால் ஆகிய வீரக்கழலை கடல் வெட்கமுறும் படி பேரொலி செய்ய; பிடியில் தடவும் -கைப்பிடியால்தடவப் பெறுகின்ற; சிலை நாண் பெரும் பூசல் ஓசை - வில்லினதுகயிற்றைத்தெறிப்பதால் உளதாகும் பெரிய ஆரவார ஒலி; இஞ்ஞால முடிவில் -இந்த உலக முடிவில்; கடல் ஏழும் மடுத்து - ஏழு கடல்களையும் குடித்து; இடியின் தொடர -இடிகளோடு தொடர்ந்து; குமுறும்- முழங்குகின்ற; மழை- மழையைக்காட்டிலும்; மும்மையின் மேல் முழங்க- மூன்று மடங்கு அதிகமாக ஒலிக்க. வில்லில் நாண் ஏற்றிய பிறகு நாணின் இறுக்கத்தைச் சோதித்துத் தெறிப்பர்;தெறிக்கும்போது எழும் ஓசை பேரொலியாக உண்டாகும். அதை வருணிப்பது கவிமரபு. 115 |