1723. | விண் நாட்டவர், மண்ணவர், விஞ்சையர், நாகர், மற்றும் எண் நாட்டவர், யாவரும் நிற்க; ஓர் மூவர் ஆகி, மண் நாட்டுநர், காட்டுநர், வீட்டுநர் வந்தபோதும், பெண் நாட்டம் ஒட்டேன். இனிப் பேர் உலகத்துள்’ என்னா. |
‘விண் நாட்டவர் - தேவர் உலகத்துள்ளவர்; மண்ணவர் - மண்னுலகில் உள்ளவர்; விஞ்சையர் - வித்தியாதரர்; நாகர் - பாதல உலகத்தில் வசிப்போர்; மற்றும் - வேறாக; எண் நாட்டவர் - எண்ணப்படும் நாட்டில் உள்ளவர்; யாவரும் - அனைவரும்; நிற்க - கிடக்கட்டும்; (அவரினும் மேம்பட்டு) ஓர் மூவர்ஆகி - மூன்று பேராக இருந்து; மண் நாட்டுநர் - உலகத்தை நிலை நிறுத்திக்காக்கின்ற திருமாலும்; காட்டுநர் - படைக்கின்ற பிரமனும்; வீட்டுநர் - அழிக்கின்ற உருத்திரனும் ஆகிய மூவர் (துணையாக); வந்த போதும் - வந்தாலும்; இனிப் பேர் உலகத்துள் பெண் நாட்டம் - இனி இவ்வுலகில் பெண்ணின் மனக்கருத்துக்கு; ஒட்டேன் - உடன்படேன்; என்னா - என்று சொல்லி. யார் துணையாக வரினும் கைகேயியின் மனக்கருத்து நிறைவேற விடமாட்டேன் என்பான் இவ்வாறுகூறினான். நாட்டுதல் - நிலைபெறுத்தல்- நிலைநிறுத்தல் அதாவது காத்தலாம். “உலகம்யாவையும் தாம் உளவாக்கலும், நிலை பெறுத்தலும், நீக்கலும்” என்பது (1.) காண்க. 118 |