2496.‘அன்று அவன் உலகினை அளிக்க ஆகியது
உன் தனிக் குலம்; முதல் உள்ள வேந்தர்கள்
இன்று அளவினும் முறை இகந்துளார் இலை;
ஒன்று உளது உரை இனம்; உணரக் கேட்டியால்.

     அவன்- அத்திசைமுகன்; அன்று- அக்காலத்து; உலகினை அளிக்க-
உலகத்தைப் படைக்க;  முதல் ஆகியது - முதலில் உண்டாகியது;  உன்
தனிக் குலம்
- உன்னுடைய ஒப்பற்ற சூரிய குலம்;  உள்ள வேந்தர்கள் -
இந்தக் குலத்தில் தோன்றியஅரசர்களும்; முறை இகந்து உளார் -
முறைமை தவறியவர்; இன்று அளவினும் - இன்றுவரையிலும்; இலை -
இல்லை; இனம் ஒன்று உரை உளது - இன்னும் ஒரு வார்த்தைஇருக்கிறது;
உணரக் கேட்டி - தெரியக் கேட்பாயாக.

     “ஆதிமால் அமலன் நாபிக்கமலத் தயனுதித்தயன் மரீசியெனும்
அண்ணலை அளித்த பரிசும், காதல் கூர்தரு மரீஇசி மகனாகி வளரும்
காசிபன் கதிர் அருக்கனை அளித்த பரிசும் “எனக் (கலிங்கத்துப். இராச. 9)
கூறுமாறு திருமால் - அயன் - மரீஇசி, காசிபன் - சூரியன் எனக் குலமுறை
காணுதலின் முதற்றோன்றிய குலமாதல் அறிக. நீ மூத்தவனாதலின் முறை
இகவாமல் நீயே அரசு புரிதல் வேண்டும் என்பது வசிட்டன் கூற்றாகும்.