இலக்குவன் கேள்வி  

1731.நீண்டான் அது உரைத்தலும்,
     நித்திலம் தோன்ற நக்கு,
‘ “சேண்தான் தொடர் மாநிலம்
     நின்னது” என்று, உந்தை செப்பப்
பூண்டாய்; “பகையால் இழந்தே,
     வனம் போதி” என்றால்,
யாண்டோ, அடியேற்கு இனிச்சீற்றம்
     அடுப்பது?’ என்றான்.

     நீண்டான் - நெடியோனாய இராமன்; அது உரைத்தலும் - அச்சொற்
கூறுதலும்;  நித்திலம் தோன்ற  நக்கு - (இலக்குவன்) பற்கள் வெளி்த்
தோன்றச்சிரித்து;  ‘சேண்தான் தொடர் மாநிலம் நின்னது’  என்று
உந்தை செப்ப
- நெடுந்தூரம்பற்றியுள்ள அகன்ற பெரிய கோசல அரசு
உன்னுடையது  என்று உன் தந்தை சொல்ல;  பூண்டாய்- சரி என்று
அதனை மேற்கொண்டாய்; பகையால் - பகைவர்களால்;’  இழந்து  வனம்
போதி என்றால்
- அரசை இழந்து  காட்டிற்குச் செல்’ என்று சொன்னால்;
அடியேற்கு- அடியேனுக்கு;  சீற்றம்  அடுப்பது - கோபம்  உண்டாவது;
இனி யாண்டோ’ -இனி எந்த இடத்திலோ;’  என்றான்-

     இராமனை வனம் போகச் சொன்ன கோபம் கொண்டு  எந்தை
என்னாமல் தயரதனை ‘நுந்தை’என்றான். சொன்ன சொல்லைப் பகையாளர்
பேச்சைக் கேட்டு மாற்றிய இவ்விடத்தில் அல்லவாகோபம் வரவேண்டும்.
வேறு  எவ்விடத்தில் இனிக் கோபம் விளைவது?  என்றான் இலக்குவன்
என்க.  நித்திலம் - முத்து,  இங்கே பற்களைக் குறித்தது.             126