1755.‘அன்னையர் அனைவரும், ஆழி வேந்தனும்
முன்னையர் அல்லர்; வெந் துயரின் மூழ்கினார்;
என்னையும் பிரிந்தனர்; இடர் உறாவகை,
உன்னை நீ என்பொருட்டு உதவுவாய்’ என்றான்.

     ‘அன்னையர் அனைவரும் - (தம்பி!) தாய்மார்கள் எல்லோரும்;
ஆழி வேந்தனும் - தயரதனும்;  முன்னையர் அல்லர் - முன்பிருந்த
நிலைமையில் இருக்கின்றாரல்லர்;  வெந் துயரின் மூழ்கினார் - கொடிய
துன்பத்தில் முழுகியிருக்கிறார்கள்; என்னையும் பிரிந்தனர்-(இந்நிலையில்)
என்னையும் பிரிய உள்ளார்கள்.  இடர் உறா வகை -இவர்கள் துன்பம்
அடையாதபடி;  என்பொருட்டு  நீ உன்னை உதவுவாய்’ - எனக்காக நீ
உன்னையே உதவுவாயாக;’  என்றான் -.

     அன்னையர் அனைவரும் - கோசலையும் சுமித்திரையும்  ஏனைய
உரிமை  மகளிரும். இராமன்நோக்கில் கைகேயி விலக்கப்பட்டாள்
ஆயினும்  ‘வெந்துயரின் மூழ்கினார்’  என்னும் பின்வந்த வினையால்
கைகேயி விலக்கப்பட்டாளாம்.                                    150