1758. | ‘பைந்தொடி ஒருத்தி சொல் கொண்டு, பார்மகள் நைந்து உயிர் நடுங்கவும், “நடத்தி கான்” எனா, உய்ந்தனன் இருந்தனன் உண்மை காவலன் மைந்தன் என்று, இனைய சொல் வழங்கினாய்?’ எனா. |
‘பைந்தொடிஒருத்தி சொல் கொண்டு - பசிய பொன்னால் ஆகிய வளையல்களைஅணிந்த ஒரு கைகேயியின் வார்த்தையை வைத்து; பார்மகள் -நிலமகள்; நைந்து உயிர் நடுங்கவும் - தேய்ந்து உயிர் தடுமாறவும் (அது கருதாது); ‘கான் நடத்தி எனா’- காட்டிற்குச் செல் என்று (உன்னை ஏவி); உய்ந்தனன்இருந்தனன் உண்மை காவலன்- பிழைத்து உயிர்வாழும் சத்தியத்தைக் காக்கின்ற மன்னனது; மைந்தன் என்று - மகன் தானே என்று கருதி; இனையசொல்வழங்கினாய்?’ - (என்னைப் பிரிந்து அயோத்தியில் இரு என) இத்தகைய கொடுஞ் சொல்லைச் சொன்னாய்;’ எனா- என்று சொல்லி, ‘நின்கண் பரிவு இல்லவர்’ என்ற (1732) செய்யுளோடு இதனை ஒப்பிட்டால் இலக்குவன்கூற்றுத் தெளிவாகும். “தந்தையர் ஒப்பர் மக்கள் என்பதனால்” இவ்வாறு கூறினாயோ என்றான் இலக்குவன். ‘உண்மை காவலன்’ இங்கு இலக்குவன் நோக்கில் இகழ்ச்சிக் குறிப்பாம். 153 |