வசிட்டன் வருதலும் சிந்தித்தலும்  

1762.அவ்வயின், அரசவை நின்றும் அன்பினன்
எவ்வம் இல் இருந் தவ முனிவன் எய்தினான்;
செவ்விய குமரரும் சென்னி தாழ்ந்தனர்;
கவ்வை அம் பெருங் கடல், முனியும் கால் வைத்தான்.

     எவ்வம் இல் அருந்தவ  முனிவன் - துன்பமற்ற அரிய தவத்தைச்
செய்த முனிவனாயவசிட்டன்;  அரசவை நின்றும் - அரச சபை
மண்டபத்திலிருந்தும்; அன்பினன் -இராமனிடத்து அன்பை உடையனாய்;
அவ்வயின் - அச் சுமித்திரை மாளிகையின்கண்;  எய்தினன் -
அடைந்தான்;  செவ்விய குமரரும் - நேரிய மைந்தர்களாய
இராமலக்குவர்களும்;  சென்னி தாழ்ந்தனர் - தலையால் வணங்கினார்கள்;
முனியும் - வசிட்டனும்;  கவ்வை அம் பெருங்கடல் - துன்பம் என்னும்
பெரிய கடலில்;  கால்வைத்தான் - இறங்கத் தொடங்கினான்.

     துன்பம் ஏதும் எய்தாது  அருந்தவம் முடித்தவன் அன்பினால்
இப்போது துன்பக் கடலில்கால்வைத்தான் என்றது  ஒரு நயம். ‘அன்னமும்
துயர்க்கடல் அடி வைத்தாள் அரோ’ (2461.) என்றுபின்வருவதும்
காண்க.                                                     157