வசிட்டன் மறுமொழி 1768. | ‘ “ வெவ் வரம்பை இல் சுரம் விரவு” என்றான் அலன்; தெவ்வர் அம்பு அனைய சொல் தீட்டினாள்தனக்கு, அவ் அரம் பொருத வேல் அரசன், ஆய்கிலாது, “இவ் வரம் தருவென்” என்று ஏன்றது உண்டு’ என்றான். |
(அது கேட்ட வசிட்டன் இராமனை நோக்கி)‘வெவ் - கொடிய; வரம்பை இல் - எல்லை இல்லாத; சுரம்- காட்டை; விரவு’ - சேர்வாய்; என்றான்அலன்’ - என்று உன்னைப் பார்த்துஅரசன் சொன்னானில்லை; தெவ்வர் அம்பு அனைய சொல் தீட்டினாள் தனக்கு- பகைவரது கணையை ஒத்த கொடிய வார்த்தையை மேலும் கொடுமையாகச் சொன்ன கைகேயிக்கு; அவ் அரம் பொருத வேல் அரசன் -அந்த அரத்தால் அராவிக் கூர்மை செய்யப்பெற்ற வேலை உடைய தசரதன்;ஆய்கிலாது- ஆராயாமல்; ‘இவ் வரம் தருவென்’ என்று ஏன்றது உண்டு- இந்த வரத்தைத் தருவேன் என்று ஒப்புக்கொண்டது உண்டு அவ்வளவே; என்றான்- தயரதன் உன்னைக் காட்டுக்கு ஏகும்படி நேராக ஆணையிடவில்லை. கைகேயிக்கு வரம் தந்தேன் என்று ஒப்புக்கொண்ட அளவேதான். ஆகவே, இதில் அரசனது ஆணையை மீறல் என்பது இல்லை என்று இராமனுக்கு வசிட்டன் கூறினான். வரம்பை; வரம்பு; ஐகாரம் சாரியை. 163 |