இராமன் புறப்பாடு 1770. | என்றபின், முனிவன் ஒன்று இயம்ப நேர்ந்திலன்; நின்றனன், நெடுங் கணீர் நிலத்து நீர்த்து உக; குன்றன தோளவன் தொழுது, கொற்றவன் பொன் திணி நெடு மதில் வாயில் போயினான். |
என்றபின்- இராமன் இவ்வாறு கூறிய பிறகு; முனிவன் - வசிட்டன்; ஒன்று இயம்ப நேர்ந்திலன் - ஒரு வார்த்தையும் சொல்ல இயலாது; நெடுங்கண் நீர்நிலத்து நீர்த்து உக - நீண்ட தன் கண் நீரானது நிலத்தில் ஈரம் செய்து சிந்த; நின்றனன்-; குன்றன தோளவன் - மலை போன்ற தோள்களை உடைய இராமன்; தொழுது- (முனிவனை) வணங்கி; கொற்றவன் பொன் திணி நெடுமதில் வாயில் - அரசனது பொன்னாற செய்யப் பெற்ற அரண்மனை மதிலின் வாயிலில்; போயினான் - போய்ச் சேர்ந்தான். குன்றன தோளவனைப் தொழுது கொற்றவனாய இராமன் நெடுமதில் வாயில் போயினான் என்பதும் ஓர் உரை ஆயினும், வசிட்டனைக் ‘குன்றன தோளவன்’ எனல்ஏற்புடைத்தாகாமையின் அவ்வுரை பொருந்தாமை அறிக. நீர்த்து - நீரின் தன்மை. செய்து அதாவதுஈரம் செய்து என்பதாகும். 165 |