இராமன் புறப்பாடு  

1770.என்றபின், முனிவன் ஒன்று இயம்ப நேர்ந்திலன்;
நின்றனன், நெடுங் கணீர் நிலத்து நீர்த்து உக;
குன்றன தோளவன் தொழுது, கொற்றவன்
பொன் திணி நெடு மதில் வாயில் போயினான்.

     என்றபின்- இராமன் இவ்வாறு  கூறிய பிறகு;  முனிவன் - வசிட்டன்;
ஒன்று  இயம்ப நேர்ந்திலன் - ஒரு வார்த்தையும் சொல்ல இயலாது;
நெடுங்கண் நீர்நிலத்து  நீர்த்து  உக - நீண்ட தன் கண் நீரானது
நிலத்தில் ஈரம் செய்து சிந்த; நின்றனன்-; குன்றன தோளவன் - மலை
போன்ற தோள்களை உடைய இராமன்;  தொழுது- (முனிவனை) வணங்கி;
கொற்றவன் பொன் திணி நெடுமதில் வாயில் - அரசனது பொன்னாற
செய்யப் பெற்ற அரண்மனை மதிலின் வாயிலில்; போயினான் - போய்ச்
சேர்ந்தான்.

     குன்றன தோளவனைப் தொழுது  கொற்றவனாய இராமன் நெடுமதில்
வாயில் போயினான் என்பதும் ஓர் உரை ஆயினும், வசிட்டனைக் ‘குன்றன
தோளவன்’ எனல்ஏற்புடைத்தாகாமையின் அவ்வுரை பொருந்தாமை அறிக.
நீர்த்து - நீரின் தன்மை. செய்து அதாவதுஈரம் செய்து என்பதாகும்.   165