1772. | ஐயனைக் காண்டலும், அணங்கு அனார்கள்தாம், மொய் இளந் தளிர்களால் முளரிமேல் விழும் மையலின் மதுகரம் கடியுமாறு என, கைகளின் மதர் நெடுங் கண்கள் எற்றினார். |
அணங்குஅனார்கள் தாம் - தெய்வ மகளிரை ஒத்த அயோத்தி நகர மகளிர்; ஐயனைக் காண்டலும் - (வனம்புகும் மரவுரி அணிந்த) இராமனைக் கண்டவுடன்; மொய்இளந்தளிர்களால் -நெருங்கி இளமையான தளிர்களைக் கொண்டு; முளரிமேல் விழும் -தாமரை மலர்மேல் வந்துவிழுகின்ற; மையலின் - கள்ளுண்ட மயக்கமுடைய; மதுகரம் - வண்டுகளை; கடியுமாறு என - ஒட்டும்தன்மை போல; கைகளின் - தம் கைகளால்; மதல்நெடுங்கண்கள்- செருக்கிய நீண்ட கண்களை; எற்றினார் - மோதினார்கள். தளிர்கள் -கைகள், தாமரை - முகம். வண்டு - கண்கள்,.ஓட்டுதல் - கை களால் மோதுதல் என உவமை காண்க. முடிசூட வேண்டிய அரச மகன்மரவுரி தரித்தகோலம் அவர்கள் கண்களாற் பார்க்கப் பொறுக்க முடியவில்லை; ஆதலின் இப்படிச் செய்தனர். 167 |