1784. | தண்டலைக் கோசலத் தலைவன் மாதரைக் கண்டனன் இரவியும், கமல வாள் முகம் - விண் தலத்து உறையும் நல் வேந்தற்கு ஆயினும், உண்டு இடர் உற்ற போது என் உறாதன? |
தண்டலைக் கோசலத் தலைவன் மாதரை- சோலை சூழ்ந்த கோசல நாட்டுக்குத் தலைவனாய தயரதன் தேவியரை; இரவியும் - சூரியனும் (இப்போது); கமல வாள்முகம் கண்டனன் - தாமரை மலர் போன்ற ஒளியுடைய முகத்தை (இது காறும் ஒருபொழுதும் காணாதவன்) கண்டான்; விண் தலத்து உறையும் நல்வேந்தற்கு ஆயினும் - விண்ணின் கண் தங்கியுள்ள தேவ அரசனுக்கு ஆனாலும்; இடர் உற்றபோது - துன்பம் வந்தபோது; உறாதன என் உண்டு? - எவைதாம் வராதவை உண்டு. வேற்றுப்பொருள் வைப்பணி. துன்பத்தில் இருப்பவர்களுக்கு எல்லா அவமானமும் வந்து சேரும் என்பது உலகியல்; அரண்மனையை விட்டு வெளியே வராதவர் ஆதலின்இதுகாறும் சூரியனால் பார்க்கப்படாதது அவர் முகம் என்றானாம். 179 |