1790. | ‘ “மண்கொடு வரும்” என, வழி இருந்தது, யாம், எண்கொடு சுடர் வனத்து எய்தல் காணவோ? பெண் கொடுவினை செயப்பெற்ற நாட்டினில் கண்கொடு பிறத்தலும் கடை’ என்றார் - சிலர். |
சிலர்-; ‘மண் கொடு வரும்’ என - இராமன் அரசாட்சி கொண்டு முடி புனைந்துவருவான் என (அக்காட்சி காண); யாம் வழியிருந்தது - வழியில் காத்திருந்தது; எண் கொடு சுடர் வனத்து எய்தல் காணவோ? - நினைக்கக் கொடிய வெப்பமுள்ள காட்டில்செல்லுதலைப் பார்ப்பதற்கோ?; பெண் கொடுவினை செயப்பெற்ற நாட்டினில் - பெண்கொடுந்தொழில் செய்யப் பொருந்திய நாட்டில்; கண் கொடு பிறத்தலும் கடை -(அந்தக் கொடுமைகளைக் காண) கண் உடையவர்களாகிப் பிறத்தலும் கீழ்த்தரமானது;’ என்றார் -. ‘கண் செய்த பாவம் கடலிற் பெரிது’ என்று (1706.)முண்சொல்லியதை ஒத்தது இது. 185 |