1801. | மக்களை மறந்தனர் மாதர்; தாயரைப் புக்க இடம் அறிந்திலர் புதல்வர்; பூசலிட்டு உக்கனர்; உயங்கினர்; உருகிச் சோர்ந்தனர் - துக்கம் நின்று அறிவினைச் சூறையாடவே. |
துக்கம் நின்று - துயரம் நிலைத்து நின்று; அறிவினைச் சூறையாட- அறிவைக் கொள்ளையிட்டுச் செல்ல (அதனால் உணர்வு மயங்கி); மாதர் - தாய்மார்கள்; மக்களை மறந்தனர் - தங்கள் பிள்ளைகளை மறந்துபோனார்கள்; புதல்வர் - பிள்ளைகள்; தாயரைப் புக்க இடம் அறிந்திலர் - தாய்மார்கள்புகுந்த இடத்தை அறியாதவர் ஆயினர்; பூசல் இட்டு - அழுது ஆர்ப்பரித்து; உக்கனர் - மனம் உடைந்து; உயங்கினர் - வாடி; உருகி - கரைந்து; சோர்ந்தனர் - சோர்வடைந்தார்கள். பிள்ளைகள் தாயரைத் தேடும் இயல்புடையவர் ஆதலின், தேடிக் கிடையாதவழி பூசல் இட்டுஉயங்கி உருகினர் என்க. இதற்குக் காரணம் தாயர் பிள்ளைகளை மறந்தமையே. அவர்கள் துக்கம்நின்று அறிவு கொள்ளை போனதால் மறந்தனர். எனவே, இராமன் காடு புகுவது நகரமாந்தரைப்படுத்திய விதம் அறிவித்தவாறு - ‘ஏ’ காரம் ஈற்றசை. 196 |