1803.மழைக் குலம் புரை குழல் விரிந்து மண் உற,
குழைக் குல முகத்தியர் குழாம் கொண்டு ஏகினர் -
இழைக் குலம் சிதறிட, ஏவுண்டு ஓய்வுறும்
உழைக் குலம் உழைப்பன ஒத்து, ஓர் பால் எலாம்.

     ஓர் பால் எலாம் - ஒரு பக்கத்தில் எல்லாம்;  ஏ உண்டு - அம்பு
பட்டு; ஒய்வுறும் - சோர்வடைந்து இறக்கும் நிலை எய்திய; உழைக்குலம் -
மான்கூட்டம்;  உழைப்பன ஒத்து - துடித்து வருந்துவன போல்;
இழைக்குலம் சிதறிட- அணிகலன்கள் கீழே சிந்த;  மழைக்குலம் புரை
குழல்
- மேகக் கூட்டம் ஒத்த கூந்தல்;விரிந்து மண் உற - அவிழ்ந்து
தரையில் புரள; குழாம் கொண்டு - கூட்டமாகி; ஏகினார் - சென்றார்கள்.

    தோடு எனப் பொருள் கூறினோம் ஆயினும் குழை என்பது
தொங்கலாக இடப்பெற்ற காதணியைக்குறிக்கும். தோடு - செறித்த
காதணியாம். கோடு - பனை யோலை, குழை - தளிர் என இவற்றை ஒப்பு
நேரிக்கி அமைந்த பெயர்கள்.                                   198